களத்தில் மடிந்தான் மாவீரன் எனக்
காதில் கேட்ட அந்நொடியே
உளத்தில் ஆயிரம் ஆயிரம் இடிகள்
உலகத் தமிழினம் அதிர்ந்ததுவே
நலமா? நலமென நம்புவம் நம்புவம்
நாளை வந்தவன் களம் காண்பான்
இவை, புலிக் குலத்தில் பிறக்கும் இன்னொருவன்
எதிரியை வீழ்த்தி நிலம் மீட்பான்
அந்தோ அந்தோ ஈழத் தமிழர்
அழுகுரல் கேட்க ஆள் இலையா?
இந்தப் பெரிய பேரண் டத்தில்
ஈழ உயிர்தான் விலை மலிவா?
கொக்கரிக் கின்றான் இராசபக்சே
பிணங்கள் தின்று பெரும்பசி யாறிப்
பேய்எனச் சிரிக்கிறான் இராசபக்சே
எத்தனை எத்தனை ஆண்டுகளாக
இருந்து வாழ்ந்த தேசமது
எத்தனை எத்தனை கனவுகள் அங்கே
எல்லாவற்றையும் அழித்தானே!
கொத்துக் கொத்தாய்க் குண்டுகள் போட்டுக்
குழந்தையர் வாழ்வையும் சிதைத்தானே!
அத்தனைக் கொலைக்கும் தண்டனை என்ன
அய்.நா. மன்றமே பதில் கூறு ?
இட்லரை விடவும் இனக்கொலை செய்த
இராஜ பக்சே மிகக் கொடியன்
ஒட்டி உறவாய் உயிர்க்கொலை புரிந்த
மன்மோகன் ஒருமாக் கொலைஞன்
மண்ணும் வானும் உள்ள வரைக்கும்
மானுடம் இனம் இதனை மறக்காது
இன்னும் ஆயிரம் தடை வந்தாலும்
ஈழப் போர் முனை தோற்காது!
-தமிழேந்தி
(சிந்தனையாளன் - திங்கள் இதழ்- சூன் 2009 )
No comments:
Post a Comment