குருதி குடித்த இரு கொலைவெறியர் போட்டியிலே
இறுதி வெற்றியினை இராசபக்சே பெற்றுவிட்டான்!
பிணந்தின்னும் கழுகுக்கு இனிப்பெரிய வேட்டைதான்
கணக்கின்றிச் செய்வான் கட்டாயம் கேட்டைத்தான்!
“இந்து”ராம் எல்லையிலா இன்பத்தில் கிறங்குவான்
சிண்டு இலாத் துக்ளக் சோ தேன்குடித்த குரங்காவான்
இத்தாலி சோனியா இங்கிருந்தே கைகுலுக்குப்
புத்தனின் தேசத்தில் மானுடம் புலம்பியழும்!
போர்க்குற்ற வாளிக்கு அரியணை புதுக்கியதில்
ஒட்டு மொத்தமாய் ஓர் இனமே, அழிகையிலே
பெட்டிப் பாம்புகள் போல் பேடிகளாய்க் கிடந்தோமே!
வெற்று உணர்வுக்கும் வீராப்புப் பேச்சிற்கும்
விற்றுத் தொலைத்த தமிழ்த் தலைவர்களால் விழுந்தோமே!
ஆட்சி தில்லியிடம் உள்ளவரை அடிமைதான்;
மீட்சி தமிழனுக்கு ஒருக்காலும் மேவாது!
கண்ணைக் கொண்டு நம் கண்ணையே சிதைத்தானே
என்னசெய்து விட்டொம் நாம்? போலி இறையாண்மை
அடித்து நொறுக்கப் படாத வரைக்கும்
கடித்துக் குதறுவான் நம்மை, ஈழத்தை!
இராசபக் சேவுக்கு, இவன் மூத்த பங்காளி
நாசக்காரன் இவன்! நமக்கென்றும் பகையாளி!
பின்னடைவைக் கண்டாலும் புலிப்படைதான் வெல்லும்
வன்னிநில விடுதலையை வரலாறு சொல்லும்!
- தமிழேந்தி
(நன்றி: சிந்தனையாளன் திங்கள் இதழ் – பிப் 2010)

2 comments:
kandipaga sollum..... Nanba
eelam vellum adhai kaalam sollum
Post a Comment